திருவரங்கம் ரங்கநாதர்
திருவரங்கம் ரங்கநாதர் கோவில்விமானம் ஆதியில் சுயம்புவாக உருவாக்கி.பின்னால் பொன்னால் வேயப்பட்டு “ௐ” என்னும் பிரணவ வடிவில் அமைந்துள்ளது. இந்த விமானத்தில் உள்ள பரவாசுதேவர் கையில் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார். அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், கிண்ணம் வாயருகில் சென்று சேர்ந்ததை அடுத்து கிண்ணத்தில் உள்ளதைப் பர வாசுதேவர் குடிக்கும் பொழுது இந்த கலியுகம் அழியும் என பரவலாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்க விமானத்தின் வெளியே விக்னேஸ்வரர் நின்று காவல் புரிவதாகவும், கீழ்ப்பக்கம் மஹாவிஷ்ணுவின் யோக மாயை ஆன துர்கை இருப்பதாகவும் கூறுகின்றனர். திருவரங்கம் விமானத்துக்குள்ளே ஆதிசேஷன் மேல் அரங்கநாதன் பள்ளிகொண்டிருக்கிறார். மேலும் திருவரங்கம் விமானத்தினுள், சப்த ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், அனைத்து தேவர்களும், த்வாதச ஆதித்யர்களும், நவக்ரஹங்களும் இருக்கின்றனர். மேலும் தன்னுடைய இந்த ரூபத்தைக்குறித்து பகவான், தான் இங்கே “த்ரிதாமன்” ஆக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்

பகவான் மூன்றே மூன்று இடங்களில் தான்“த்ரிதாமன்” ஆக இருப்பதாகவும் அவற்றில் இது முதன்மையானது திருவரங்கம் எனவும் கூறப்படுகிறது. இந்த மூன்று இடங்களிலும் தனது சுயரூபத்தோடு இருப்பதால் த்ரிதாமன் எனப்படுவதாகக் கூறுகின்றனர். மேலும் திருவரங்க க்ஷேத்திரம் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படுகிறது. மனிதராலோ, தேவர்களாலோ, ரிஷி, முனிவர்களாலோ நிர்மாணிக்கப் படாமல் தானாகவே உண்டான க்ஷேத்திரங்கள் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படும். அவை ஸ்ரீரங்கத்தைச் சேர்த்து எட்டு ஆகும்.
- திருவரங்கம்
- திருமுஷ்ணம்
- திருமலை
- சாளக்கிராம மலை
- நைமிசாரண்யம்
- தோதாத்ரி
- புஷ்கர க்ஷேத்ரம்
- பத்ரிநாதம்
இவற்றில் முதன்மையானதும் திருவரங்கம். 108 திவ்ய ஸ்தலங்களில் முக்கியமானதும், முதன்மையானதுவும் திருவரங்கம் அரங்கநாத ஆலயம் ஆகும்.

தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட க்ஷேத்திரங்களுக்கு திவ்ய க்ஷேத்திரங்கள் என்றும், ரிஷி, முனிவர்கள், போன்றோர் தங்கள் சித்தியால் ஏற்படுத்தும் க்ஷேத்திரங்களுக்கு “ஸைந்தம்” என்றும், மனிதர்களால் நிர்மாணிக்கப்படும் கோயில்களை “மாநுஷம்” என்றும் கூறுவார்கள். இப்படி ஸ்வயம்வ்யக்தம், தைவிகம், ஸைந்தம், மாநுஷம் என்னும் நால்வகையான நிர்மாணம் செய்யப்பட்ட கோயில்களே நூற்றெட்டு திருப்பதிகளில் அடங்குகிறது.
ஆதியில் ஸ்ரீரங்க நாதரை வழிபடும் முறையை பிரம்மாவுக்கு அரங்கநாதர் சொல்லிக்கொடுத்தார் என்று திருவரங்க மஹாத்மியம் கூறுகிறது. ஹலோபாஞ்சராத்ர முறைப்படி வழிபடச் சொன்னதாகவும் ஒரு நாளை ஐந்து காலமாகப் பிரித்துக்கொண்டு வழிபாடுகளை நடத்தச் சொன்னதாகவும், நித்யகர்மாக்களுக்கும், அநுஷ்டானங்களுக்கும் பின்னரே தனது அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்க வேண்டும் எனவும் கூறியதாகத் தெரிய வருகிறது.
பிரமனும் அவ்வாறே பாஞ்சராத்ர முறைப்படி வழிபட்டதாகவும், பின்னர் ஐந்து ருத்ரர்கள், பிரம்ம ரிஷிகள், தக்ஷப்ரஜாபதி தேவர்கள் என அனைவருக்கும், த்வாதச அக்ஷர உபதேசம் செய்து இந்தப் போகோபூஜாமுறையை அறிமுகப் படுத்தி வைத்ததாகவும், பிரமனாலும் ஒரு முறை ரங்கநாதரை தோன்றிய முறை பற்றி விவரிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
பின்னர் பிரம்மா சூரியனுக்கும் இந்த வழிபாட்டு முறையைச் சொல்லிக் கொடுக்க, சூரியன் தன் மகனான வைவஸ்வத மநுவுக்குச் சொல்ல, அவனிடம் இருந்து வைவஸ்வத மநுவின் புத்திரன் இக்ஷ்வாகுவுக்குப் போய் அவர்களின் குல தனம் ஆயிற்று பின்னர் அரங்கநாதர் விமானத்தோடேயே காவிரிக்கரைக்கு வந்து சேர்ந்தார்.